Friday, December 28, 2007

இல்லற இயலும் சமணமும்

சமண அவதூறுகள் 2

இல்லற இயலும் சமணமும்!


சமணம் இல்லறத்தை வெறுத்தது! - அவதூறு 2


சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். சமணத்தை முடக்கவும், பாமர மக்களை மயங்க வைக்கவும் சமணத்தை எதிர்த்தவர்கள் எடுத்துக் கொண்ட முக்கிய ஆயுதம் இதுவென்றால் அது மிகையல்ல. சமணம் இல்லறத்தை வெறுத்தது, சமணத்திற்கும் இல்லறத்திற்கும் வெகு தூரம் என்று சொல்லி சொல்லியே ஆட்சியை பிடித்த சமயங்கள் பல உண்டு. ;-)


சமணம் இல்லறத்தை வெறுத்ததா?

உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!


“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
புல்ல உரைப்பது நூல் - அருங்கலச் செப்பு (60)


வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் - அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதுப்பற்றி மேலும் அறிய என்னுடைய தொல்காப்பியர் என்னும் கட்டுரையைப் படிக்கவும்.

இவ்வாறு ஆதிபகவன் இரு அறங்களையும் அருளியதோடு அல்லாமல் அவ்வாறு நடந்துக் காட்டினார். இல்லறத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய பின் துறவறத்தை மேற்கொண்டார் என்றும் கீழே வரும் பாடல் குறிக்கிறது.


“மன்னுயிர் காத்தலான் மனம்விட்டு அருளினொடு
இன்னுயிர் உய்கஎன இல்லறமும் இயற்றினையே
புன்மைசால் அற நீக்கிப் புலவர்கள் தொழுது ஏத்தக்
தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே”
- யாப். விருத்தி (சூ. 84)


“ஆதியாய் உலகியல்பை அளித்தாய் நீயே!” - தோத்திரத் திரட்டு.


மேற்கூறியப் பாடல் மூலம் ஒன்று புலப்படுகிறது. உலகிற்கு முதன் முதலாய் இல்லறம், துறவறம் என்று வகுத்துக் கொடுத்தது அருக கடவுளான “ஆதிபகவன்” என்று அழைக்கப்படும் “ஆதிநாத”ரே என்பதும் பெறப்படுகிறது.


இரண்டு அறங்களும் ஒன்றே!


“பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)

வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் பெற்று, அதை பலரும் பயன்பெற பகுத்துத்தந்து கூடி வாழும் இல்லறமும், முற்றுந்துறந்து, தவநிலை தவறாமல் நிற்கும் துறவறமும் ஒன்றுதான் என்று மேலே கூறியப் பாடல் சொல்கிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம். “சீவகசிந்தாமணி” என்னும் ஒப்பற்ற காவியம் பாடிய “திருத்தக்கதேவர்“ அவர்கள் அருளிய “நரிவிருத்த’த்தில் தான் மேலே கூறியப் பாடல் வருகிறது.

அம்மட்டோ,


“வினைகாத்து வந்த விருந்துஓம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்துஓம்பிச்
சொலெதிர் சொல்லாள் எனில்” - அறநெறிச்சாரம் (157)

இல்லறத்தின் தர்மத்தைக் காத்து, வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தினரை நோக்கி காத்திருக்கும் இல்லறத்தானின் இல்வாழ்க்கை உயர்த் தவத்தினை விட சிறந்தது என்று மேலே கூறப்பட்டப் பாடல் கூறுகிறது.

எங்கே மனதைத் தொட்டு சொல்லுங்கள், மேலே கூறியப் பாடலகளில் திருக்குறளின் சாயல் தெரியவில்லை?. திருக்குறளின் 47 & 48 ஆவது குறட்பாக்களை இங்கே நினைத்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

மேலே கூறியப் பாடல்களின் மூலம் பகுத்துண்டு பல்லூயிர் ஓம்பும் இல்லறமும், ஒழுக்கம் மாறா தவநிலைத் துறவறமும் ஒன்றே என்பது பெறப்படுகிறது.

கட்டுரையை முடிக்கும் முன் கீழே வருவனவற்றை கொஞ்சம் படித்து வையுங்கள். :-)




சமணமும் தமிழும் (பக்கம் 28)

“தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர்கள், சமணர்கள் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.

“நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்கிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப் போன்றுதான் உடை உடுத்தி இருப்பார்கள்” என்று கூறியபோது அந்த நண்பர், ‘அப்படியா” என்று அதியப்பட்டார்” என்று மயிலையார் எழுதியிருக்கிறார்.


முடிபு

இப்படித்தான் இருக்கிறது இன்றைய தலைமுறையினரின் சமணப் பற்றியப் புரிதல்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, திருக்குறளில் காமத்துப்பால் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால், திருக்குறள் சமண நூலாக இருக்க முடியாது என்பார்கள். அவர்கள் காமரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட “சீவக சிந்தாமணி” யை மறந்துவிட்டார்கள் போலும்; திருத்தக்க தேவர் என்னும் சமண பெரியார் அன்றோ அந்நூலை வடித்தது? தங்கள் வசதிக்காக மறந்துவிடுகிறார்கள்! :-)


யான், இணைய அன்பர்களுக்கும், மற்ற சகோதர நண்பர்களுக்கும் கூறுவது யாதெனின்? சமணத்தை நேரடியாகப் படியுங்கள். சமணத்தைப் பற்றிய அறிய நிறைய தமிழ் நூற்கள் உண்டு. குறிப்பாக, இல்லற தர்மத்தை அறிய, அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு போன்ற நூற்கள் உதவும்.


அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை!!

இரா.பானுகுமார்,
சென்னை 61

Thursday, November 29, 2007

சமண அவதூறுகள் - 1

சமண அவதூறுகள் - 1

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு
அரும்பாடுப்பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம்
மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள்
அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை!
எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும்,
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு
அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல்
இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்?
நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!
(நன்னூல்).

இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர்.
அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ்
நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக
இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த
போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தை கூறுவோம்!


அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான்.
வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால்
அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்
மிருகங்கள் பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன
என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.

இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)


சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே
உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை
அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.


"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)

என்றும்,


"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" - அருங்கலச் செப்பு (37)


என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில்
இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.


சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!
வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு
சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய
அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை
மக்களும் நம்பலானார்கள். சமணர்கள் எழுதிய நூற்கள் அழிக்கப்பட்டன.
அவர்களுடைய நூற்கள் பிற சமய நூற்கள் ஆக்கப்பட்டன. அருகக்
கடவுள் வாழ்த்து விநாயகர் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அருகன்
கோயில்கள் சைவ, வைணவ கோயில்கள் ஆயின. இதில் வேடிக்கை
என்னவென்றால்? அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?

சமணம் வீழ்ந்ததும், வேதமதம் சைவத்தை அழித்தது. சைவ
வேளாளர்கள் தாழ்ந்துப் போனார்கள். சைவர்கள் நிறுவகித்து வந்த
கோயில்கள் வேதமதத்தினர் தம் வசப்படுத்தினார்கள். சைவ
வேளாளர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு
துரத்தப்பட்டார்கள். உதாரணம்: சிதம்பரம் கோயில்.


சரி. விடயத்திற்கு வருவோம். சமணத்தைப் பற்றிய அவதூறுகள்
என்னென்ன? அவைகள் உண்மைதானா? அதற்கு ஆதாரம்
என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வது தான்
இக்கட்டுரையின் நோக்கம்.


சமண மதம் நாத்திக மதம் - அவதூறு ஒன்று!

சமண மதம் நாத்திகமா?

இந்த கேள்வியை தற்போதைய வலைஞர்களை கேட்டால்
பெரும்பாலோர் நாத்திகம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நடைபெற்று வந்த
பிரசாரத்தின் வலு அப்படி.


சமணம் ஆத்திகமே!


சமணம் இறைவனை, இறைமையை (இறைத்தன்மை) ஏற்றுக்கொள்ளும்
மதமே. அவ்வகையில் அது ஆத்திக மதமே!

சமணம் உயிரின்பால் பட்டது என்பதை முன்னமே சொன்னேன்.
எந்த ஒரு ஆன்மாவும் சுயரூபத்தில் இறைவன்தான். ஆனால்,
அவைகள் வினைத்துகள்களால் அழுத்தப்பட்டு தன்னிலை மறந்து
மடமையில் ஆழ்ந்திருகின்றன.

எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.

"தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்
" - அறநெறிச் சாரம் (77)


ஆனால், அது கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்;
யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும்
அழிப்பவரும் அல்லர்.

சற்று பொறுங்கள். கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?
அப்படியானால், அது நாத்திக மதம்தானே? என்று யாராவது
கேட்டலாம். இந்தியச் சமயங்கள் தவிர வேறு எந்த சமயமும்
இக்கேள்வியை கேட்டிருந்தால் யான் நாத்திக மதம் என்றுதான்
கூறியிருப்பேன். ஏன்னென்றால் அவர்கள் கூற்றுப்படி கர்த்தா
வாதத்தை ஏற்காத எந்த மதமும் நாத்திகம்தான். ஆனால்,
இந்திய மதங்களைப் பொருத்தவரை நாத்திகம் என்ற பேச்சுக்கே
இடமில்லை. இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-)

பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது. திராவிட சிசு
என்றழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய தேவாரமும்,
பெரியப் புராணமும்தான் அதற்கு சாட்சி. அங்கே படித்துத்
தெரிந்துக் கொள்ளுங்கள்.

காட்டுக்கள் சில:

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனோடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஒட்டி வாது செய்யத் திருவுள்ளமே
"

"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே
"

என்று சிவபெருமானை அழைக்கிறார்!


இரா.பானுகுமார்,
சென்னை.

Sunday, November 25, 2007

தீபாவளி திருநாள்

தீபாளிகாயா


நம் பாரத நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் பண்டிகைகளில் மிக
பிரபலமாகக் கொண்டாடப்படுவது "தீபாவளி" பண்டிகையாகும்.
இந்திய மதத்தினர் அனைவரும் இப்பண்டிகையைக் கொண்டாடி
வருகின்றனர். தற்போது, இந்தப் பண்டிகையை பிற நாடுகளும்
அங்கீகரித்து வருவதால், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு
வரும் பண்டிகையாக மாறிவருகிறது.


தீபாவளி:

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள்.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? அதற்கு காரணம் என்ன?
ஏன் வரிசையாக தீபம் ஏற்றி வைக்கிறார்கள் என்பதனை
இக்கட்டுரையின் மூலம் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


இந்தியாவில் தோன்றியச் சமயங்கள் அனைத்தும் இப்பண்டிகையைக்
கொண்டாடி வருகின்றன என்பதை முன்னமே பார்த்தோம். ஒவ்வொரு
இந்தியச் சமயங்களும் இப்பண்டிகையை ஒற்றுமையாகக் கொண்டாடி
வந்தபோதும் அதற்கு அவைகள் சொன்ன காரணங்கள் - வெவ்வேறாக
இருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடுகள்? ஏதாவது ஒன்றுதானே
சரியான காரணமாக இருக்க முடியும்? இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல
பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்? இல்லையா! அந்த கேள்விக்கு
விடைக்காண முயற்சிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.



மற்ற மதங்களில் தீபாவளி:

தற்போது, இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதால்,
இப்பண்டிகை இப்போது இந்துக்கள் பண்டிகையாகவே
கொண்டாடப்பட்டுவருகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களை
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்?


ஒன்றாவது காரணம்:

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? என்று தமிழ்நாட்டு இந்துக்களை
கேட்டால், அவர்கள் பெரும்பாலோர் சொல்லும் முதல் காரணம் இந்த
பதிலாகத்தான் இருக்கும். அந்நாளில்தான் கிருஷ்ணர், நரகாசூரனை
வதம் செய்தார் என்றும் அவன் இறந்த இந்த நாளை மக்கள் அனைவரும்
தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர் என்பார்கள். இந்த கதை
வடநாட்டில் வழங்கிவருகிறதா? என்பது சந்தேகமே. இந்தக் கதை
தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னங்கேறன்? ;-)


இரண்டாவது காரணம்:

கொஞ்சம் படித்தவர்களைக் கேட்டால் [ ;-)] இந்த நாளில், இராமர்
வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியதால், அயோத்தி மக்கள்
அனைவரும் தீபம் ஏற்றிக் கொண்டாடினர் என்பார்கள். இந்த காரணம்
வலுவானதாக இல்லை. இராமர் வனவாசக் காலத்தில் அவனுடைய
தம்பி பரதன் அயோத்தியை ஆண்டு வந்தான். ஒரு வேளை
பரதனுடைய ஆட்சி அவ்வளவு மோசமானதாக இருந்திருக்குமோ?
சும்மா ஒரு விளையாட்டிற்காகதான்! :-)

சரி. வால்மீகி இராமயணத்தில் இச்செய்தி வருவதாக சொல்கிறார்கள்?
அன்பர்கள் யாராவது வால்மீகியில் எந்த இடத்தில், எத்தனையாவது
ஸ்லோகத்தில் இச்செய்தி சொல்லப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டு
சொல்ல முடியுமா? அல்லது ஏதாவது வலைச்சுட்டி? இராமயணத்தில்
"தீபாவளி" என்ற சொற்றொடர் ஆண்டு வருகிறதா? வால்மீகியைத் தழுவி
எழுந்த அல்லது எழுதப்பட்ட அனைத்து இராமாயணங்களிலும்
இச்செய்திச் சொல்லப்பட்டு இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு
விடைக் காணவேண்டும்!


மூன்றாவது காரணம்:

இன்னும் சிலர் மகாபலி, கீழ் உலகத்தில் இருந்து, கிருஷ்ணன்பகவான்
ஆணைப்படி பூமிக்கு வந்த நாள் என்று கதை சொல்வார்கள்.



காரணம் நான்கு:

சைவர்கள், சிவபெருமான், "அர்த்தநாரீஸ்வரராக' அன்றைய நாளில்
காட்சியளித்ததாக கூறுவார்கள்.


இன்னும் நிறையக் காரணங்கள் கூறப்பட்டாலும் ஏதாவது ஒன்றுதானே
தீபாவளிக் கொண்டாடுவதற்கு காரணமாக இருக்கு முடியும்.

மேலும், மேலே கூறப்பட்ட காரணங்களில் எந்த ஒரு காரணத்திற்காக
இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வருகின்றனர் என்பதை அவர்களே
தெளிவாகச் முடிவு செய்துக் சொல்லட்டும்.

இவ்வளவும் ஒரே ஒரு உண்மையை மறைக்க சொல்லப்பட்ட
கட்டுக்கதைகள் என்பதுதான் நிதர்சணம். அந்த உண்மைதான் என்ன?



மகாவீரர் பரிநிர்வாண நாள்:

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர்.
அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண
மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி, வீடுகளில் தீபங்களை ஏற்றி
வைத்தார்கள். அந்நந்நாளே இன்றுவரை அனைவராலும்
கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதுப்
போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.

சமணர்களின் திருநாளை ஏன் இந்துக்களும் கொண்டாட வேண்டும்
என்ற கேள்வி எழலாம்? அதற்கு யான் சொல்லும் சமாதானம்
இதுவே. ஒரு காலத்தில், இந்திய தேசம் முழுதும் சமண மதமே
பரவியிருந்தது. பாரத மக்கள் அனைவரும் சமணர்களாகவே
இருந்தார்கள். பின் காலம் செல்ல, செல்ல இந்து மதத்தின்
ஆதிக்கத்தினால் மக்கள் இந்து மதங்களுக்கு மாறத் தொடங்கினர்.
அப்படி மாறிய மக்களுக்கு அந்த திருநாளைக் கொண்டாட இந்து
மதத்தில் ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட வேண்டும் இல்லையா?
அப்படி சொல்லப்பட்டவைத்தான் மேலே கூறப்பட்ட காரணங்கள்.


இலக்கிய ஆதாரங்கள்:

சமண இலக்கியத்தில் 'தீபாவளி'

பாரத இலக்கிய வரலாற்றில் "தீபாவளி" என்ற சொற்றோடர் சமண
இலக்கியங்களில் தான் முதன் முதலாக வழங்கி வந்திருக்கிறது.
ஆச்சாரியர் பத்ரபாகு முனிவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சமண முனிவர். அந்த முனிவரால் என்பவரால் எழுதப்பட்ட
"கல்ப சூத்திரம்' என்னும் பிராகிருத நூலில் பின்வருமாறு
கூறப்பட்டிருக்கிறது.

"மகாவீரர்" என்ற ஞான ஒளி மறைந்துவிட்டதால், தீப
விளக்கையாவது ஏற்றி வைப்போம்" என்று காசி, கோச மக்களும்,
பதினாறு கண அரச மக்களும், தங்கள் வீடுகளின் முன் தீபம்
ஏற்றி வைத்தார்கள்".


மற்றும், கி.பி. ஆறாம் நூற்றாண்டில், ஆச்சாரியர் ஜினசேன
முனிவர் என்பவரால் எழுதப்பட்ட "ஹரிவம்ச புராணம்" என்ற
நூலில் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது.

"கடவுளர்கள் அந்நாளில் விளக்குகளை வரிசையாக
ஏற்றி வைத்து அவருடைய மோட்சத்தை நினைவுப்படுத்தினார்கள்.
அன்றிலிருந்து பாரத மக்களும் அந்நாளில் தீபங்களை
வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடி வரலானார்கள்".

"தீபாளிகாயா" என்ற சொல்லும் அந்நூலில்தான் முதன்
முதலில் பயின்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "தீபாளிகாயா'
என்றால் "ஞான தீபம் உடலை நீங்குகிறது" என்று பொருள்.
அச்சொல்லில் இருந்து வந்ததுதான் இன்று அழைக்கப்படும் "தீபாவளி"
என்ற திருநாள்.

http://www.cs.colostate.edu/~malaiya/diwali.html
http://en.wikipedia.org/wiki/Diwali

மகாவீரர் இறந்த நாளை ஏன் மக்கள் கொண்டாடவேண்டும்? என்ற
கேள்வியும் எழத்தானே செய்யும்? சமண தீர்த்தங்கரர்கள் வாழ்க்கையில்
"பஞ்ச கல்யாணங்கள்" சிறப்பாகாகப் போற்றப்படுகிறது. தமிழில்
ஐம்பெரும் கலியாணங்கள்" என்று அழைப்பார்கள். இதைப்பற்றி
தனிக் கட்டுரையாக எழுத உள்ளேன். அங்கு படித்துக் கொள்க.
இந்த ஐந்து கல்யாணங்களில் கடைசியாகக் கொண்டாடப்படுவது
தான் 'பரிநிர்வாண கல்யாணம்". மகாவீரர் வீடுபேறடைந்த நாள்.
உயிர்களின் கடைசி நிலை "வீடுபேறு". அதனால், சமணர்கள்
தீர்த்தங்கரர்களின் பிறந்த நாளைவிட அவர்கள் மோட்ச நாளையே
சிறப்பாகக் கொண்டாடுவார்கள். "சிவராத்திரியும்" அவ்வாறே! ;-)


உண்மைத் திருநாள்:

அத்திருநாளில், பகவான் வர்த்தமான மகாவீரரை நினைத்து அவர்
வழிநடப்போம். அவர் வழிப் + படுவோம். அந்நாளில் இரப்பாருக்கு
கொடுப்போம். மற்ற உயிர்களுக்கு அச்சம் ஏற்படாதிருக்க "பட்டாசு
வெடிகளை" தவிர்ப்போம்.

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!



இரா.பானுகுமார்,
சென்னை

Tuesday, October 02, 2007

சிவபெருமானும் ஆதிநாதரும் - 1

சிவபெருமானும் ஆதிநாதரும்


சைவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். சமணர்களின் முதற் கடவுள்
ஆதிநாதர். இந்திய சமய வரலாற்றில் வேறெந்த கடவுளர்களுக்கும் இல்லாத
ஒற்றுமைகள் இந்த இரு கடவுளுக்கும் இருக்கின்றன. இச்சிறு கட்டுரையின்
நோக்கம் இந்த இரு கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஒப்பு
நோக்கிப் பார்ப்பதுதான். இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. முன்னமே
நிறைய அறிஞர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். மயிலை. சீனி.
வேங்கடசாமி அவர்களும் "சமணமும் தமிழும்" என்ற தம் நூலில்
கூறியிருக்கிறார். இங்கு அதையே மேலும் விரித்து விளக்கிக் கூற
முயன்றிருக்கிறேன். நிறைய வலைஞர்களுக்கும், வலையுலா
வருபவர்களுக்கும் இது புது கருத்தாகவும்,
செய்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.



ஒற்றுமைகள்:



1. சிவபெருமான்: சைவர்களின் முழுமுதற் கடவுள்.
பகவான் ஆதிநாதர்: சமணர்களின் முதற் தீர்த்தங்கரர் (கடவுள்).

2. சிவன்: இவரை "பிறவாயாக்கை பெரியோன்" என்றழைப்பர். யார்
வயிற்றிலும் பிறவாமல் தோன்றிய தலைவன் என்பது கருத்து.
ஆதிநாதர்: இவருக்கும் இப்பெயர் பொருந்தும். இவர் நம்மை போன்று
மனிதனாகப் பிறந்து, இருவினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும்
பிறவாத நிலையடைந்ததால், பிறவா யாக்கை பெரியோன் என்று
போற்றப்பட்டார்.

3. சிவன்: இவருக்கு இரண்டு மகன்கள். விநாயகன் மற்றும் முருகன்.
ஆதிநாதர்: இவருக்கும் இரண்டு மகன்கள். பரதன் மற்றும் பாகுபலி.

4. சிவன்: ஒரு பழத்துக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.
ஆதிநாதர்: அரசாட்சிப்பதவிக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.

5. சிவன்: இச்சண்டையில், இளைய மகனான முருகன் கோபித்துக்
கொண்டு, ஆண்டியாக சென்றான். (பழனியாண்டி)
ஆதிநாதர்: இச்சண்டையில், இளைய மகனான பாகுபலி, தன் அண்ணனிடமே
சண்டையிட்டதை நினைத்து மனம் வெறுத்துப்போய், முற்றும் துறந்து ஆண்டியாக
சென்றான். (கோமடேசுவரர் அல்லது பாகுபலி, சிரவணபெளிகுளம்)

6. சிவன். இவர் சடா முடியுடன் தோற்றமளிப்பதால், கேசவன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆதிநாதர்: இவர் நீண்ட காலங்கள் தொடர்ந்து தவம் இயற்றியதால், முடி வளர்ந்து,
சடைமுடிக் கொண்டவராகக் காட்சியளித்ததால், இவருக்கும் இப்பெயர் அமைந்தது.

"ஆலநெடு நிழலமந்தனை
காலம் மூன்றும் கடந்தானை
தாழ்சடை முடிசென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை" - திருக்கலம்பகம்


7. சிவன்: சிவனின் இருப்பிடம் கயிலாயமலை.
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறடைந்ததும் திருகயிலாயமலை என்ற இதே
இடத்தில்தான்.

8. சிவன்: சைவர்களுக்கு 'சிவராத்திரி" மிக முக்கியமான நாள்.
(ஏன் என்று தெரியாது?)
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளை, சமணர்கள் "சிவராத்திரி"யாகக்
கொண்டாடுகிறார்கள்.

9. சிவன்: சிவனுடைய வாகனம் எருது.
ஆதிநாதர்: ஆதிநாதருடைய "இலஞ்சினம்" (சின்னம்) எருது. எருது அறத்தின்
சின்னமாக கருதப்படுகிறது. ஆதிநாதரே, உலகிற்கு அறத்தைப் போதித்தவர்.
இல்லறம், துறவறம் என்று பிரித்து அறம் உரைத்தவரும் இவரே. ஆதலால்,
இவர் சிலையின் அடியில் எருது சின்னத்தைப் பொறித்து வைத்தனர் சமணர்கள்.

10.சிவன்: இவருடைய பரிவாரத் தெய்வங்களில் "நந்திதேவர்" முதன்மையானவர்.
ஆதிநாதர்: இவருடைய பரிவாரத் (சாசன) தெய்வங்களில் முதன்மையானவர்
கோமுகயட்சன்.

11.சிவன்: இவர் காலனை உதைத்தார். அதாவது எமனை வென்றவர்
என்பது கருத்து.
ஆதிநாதர்: காலன் இறப்புக்கு உருவகம். இறப்பையும், பிறப்பையும் கடந்தவர்
ஆதலால், காலைனை கடிந்தவர் ஆனார்.

"கன்று காலனைக் கடிந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்!" - நீலகேசி

12.சிவன்: சிவபெருமான் காமனை (காமத்தை)எறித்தவர்.
ஆதிநாதர்: காம உணர்ச்சி காமனுக்கு (மன்மதன்) உருவகம். ஆதிநாதர்
மோகனீயக் கருமத்தை வென்றவர்.

"களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப" - சீவக சிந்தாமணி

13.சிவன்: இவர் முப்புரத்தை எரித்தார். மூன்று கோட்டைகளை அழித்தார்
என்றும் மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்தார் என்றும்
சொல்லப்படுகிறது. எங்ஙனமெனில், இவர் இயற்கையாகவே இந்த மூன்றும்
இல்லாதவர். பக்தர் பொருட்டு, அம்மூன்று மலங்களையும் அழித்தவர்.
ஆதிநாதர்: இவரும் முப்புரத்தை எரித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது
காமம், வெகுளி, மயக்கம் என்ற குணங்களை தன்னிடம் வராமல் தடுத்து
வென்றவர் என்பது கருத்து.

"ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா' - சிலப்பதிகாரம்

14.சிவன்: இவர் மனைவியாகிய உமையாளுக்கு தன் உடம்பில் பாதியைக்
கொடுத்தவர். ஆதலால், "அர்த்தநாரீஸ்வரர்" எனப்பட்டார்.
ஆதிநாதர்: இவருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" என்ற திருநாமம் உண்டு.
சமணத்தில். கல்வியையும், அறிவையும் (இருவினைகளை அகற்றியதனால்
பெறப்படும் அறிவு. வாலறிவு என்றும் கேவல ஞானம் என்றும் அழைப்பர்),
மோட்சத்தையும் (நிர்வாணம்) பெண்களாக உருவகிப்பார்கள். ஆதிபகவன்,
இருவகை வினைகளையும் வென்று, கேவல ஞானம் (அறிவு) என்னும்
அரசியைப் பெற்றதனால் (மணந்ததினால்), "அர்த்தநாரீஸ்வரர்"
என்றழைக்கப்பட்டார்.

"பிரச நாள்மலர்ப் பிண்டியிற் கண்டபே ரமுதே
பிறங்கு பேரொளிக் கேவலத் தரசியைப் பிரியா
அரச னேதிரு நறுங்கொண்டை வடதிரு மலைமேல்
அப்ப னேஅடி யேனையும் அஞ்சல்என் றருளே" - திருநறுங்கொண்டைப் பதிகம்

15.சிவன்: இவருக்கு இரண்டு கண்கள் தவிர நெற்றியில் மற்றொரு கண்
அமைந்ததினால், "முக்கண்ணன்" என்று போற்றப் பெற்றார்.
ஆதிநாதர்: இவர் வாலறிவு (கேவல ஞானம்) பெற்றதனால், அறிவை
கண்ணுக்கு உருவகப்படுத்தி "முக்கண்ணன்" என்று அழைக்கப்பட்டார்.
இவருக்கு ஊனக் கண்கள் இரண்டு, அறிவுக் கண் ஒன்று; மொத்தம்
மூன்று கண்கள்.

16.சிவன்: திரிசூலம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பவர்.
ஆதிநாதர்: சமணர்கள் மூன்று இரத்தினங்களைப் போற்றுவர். அவை
"திரைரத்னா" என்று வடமொழியில் அழைக்கப்படும். அவை நற்காட்சி,
நல்லறிவு, நல்லொழுக்கம் என்பனவாம். பிராகிருத மொழியில் சூல்
என்பதற்கு மணி என்ற பொருளும் உண்டு. ஆதலால், இவருக்கு
மூன்று இரத்தினங்களைத் தரித்தவர் என்ற கருத்தில் திரிசூலம் காட்டப்படும்.

17.சிவன்: இவரிடம் இருந்தே "ஓங்காரம்" என்ற ஒலி பிறந்ததாகவும்,
அதிலிருந்தே எழுத்துக்கள் தோன்றின என்பார் பாணினி.
ஆதிநாதர்: இவர் தம் மகள்களான பிரம்மி, சுந்தரி என்பவர்களுக்கு
எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். பிரம்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு
எண்ணையும் கற்பித்தார் என மகாபுராணம் கூறும். தமிழில் சூடாமணி
நிகண்டு பின்வருமாறு கூறுகிறது.

"எண்ணோடு எழத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி" - சூடாமணி நிகண்டு.

தற்கால எழுத்துக்கள் எல்லாம் பிரம்மி என்னும் எழுத்துருவை அடிப்படையாகக்
கொண்டது என்பது சிந்திதற்பாலது. ஒரு கொசுறுச் செய்தி - எழுத்துக்கள்
வலப்பக்கத்தில் இருந்தும், எண்கள் இடப்பக்கத்தில் இருந்தும் தொடங்கவேண்டும்
என்று ஆதிநாதர் தம் மகள்களுக்கு அறிவுறித்தியதாக "அவஸ்யக நில்யுக்தி"
என்னும் சமண நூல் கூறுகிறது.


முதற் பாகம் முற்றிற்று!


இரா. பானுகுமார்,
சென்னை.

Sunday, June 24, 2007

மலர்மிசை ஏகினான்

மலர்மிசை ஏகினான்

திருக்குறள்

தமிழில் தோன்றிய அனைத்து வகைப்பட்ட நூற்களில் தலையாய இடத்தில் வைத்து எண்ணப்படுவது திருக்குறளாம். இது குறள் வெண்பாவினால் எழுதப்பட்ட நூல். இந்நூல் சங்கம் மருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் “பதிண்ணென் கீழ்க்கணக்கு” நூற்களில் ஒன்று. இவர் சமயம் பற்றி நிறையக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. எனினும், திருக்குறளை உரிமை கோருவதில் மூன்று சமயங்களான சமணம், பெளத்தம் மற்றும் சைவம் ஆகிய முன்னிலை வகிக்கின்றன.

கடவுள் வாழ்த்து

இந்நூலின் ஆசிரியர் சமயம் பற்றி அறிய இந்நூலில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்து அதிகாரம் துணைப்புரிகிறது. கடவுள் வாழ்த்தில் மொத்தம் பத்துப் பாடல்கள். அந்த பத்துப் பாடல்களில் இங்கு ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கு ஆராய்வோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் இல்லையா!


திருக்குறள் சமயம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் - திருக்குறள் (3)

முதலில் மேல் கூறிய குறளுக்கு முதலில் உரையாசிரியர்கள் என்ன பொருள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

மணக்குடவர் உரை:

மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
“நிலம்” என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார். முற்படக் போகநுகர்வாரென்று கூறினர்.

பரிமேலழகர் உரை:

மலர்மிசை ஏனினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைத்த வடிவோடு விரைந்து சேறலின், “ஏகினான்” என இறந்த காலத்தால் கூறினார்.

அவர் மேலும் விரித்து, இதனைப் பூ மேல் நடந்தான்” என்பதோர் பெயர் பற்றிப் பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்.

மேற்கூறிய உரைகளை கூர்ந்து நோக்கும்போது இரண்டு உரையாசிரியர்களும் தங்கள் உரைகளில் ஒன்றுப்படுகிறார்கள். ஆனால், தங்கள் விரிவுரையில் முற்றிலும் வேறுபடுகிறார்கள். மணக்குடவர் உரையிலும், விரிவுரையிலும் தெளிவும், நேரிதின் பொருள் வருமாறும் உரை வகுத்திருக்கிறார். ஆனால், பரிமேலழகரோ தன் விரிவுரையில் நூல் ஆசிரியரிடம் இருந்து முற்றும் வேறுபடுகிறார். எங்ஙனமெனில், அவற்றை ஈண்டு விளக்குவோம்.

“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு “ மலரின்கண்ணே சென்றவன்” அல்லது “மலர் மேல் நடந்தவன்” என்பதுதான் நேரிடையான பொருள். இதில் இரண்டு உரையாசிரியர்களும் உடன்படுகிறார்கள். ஆனால், விரிவுரையில் பரிமேலழகர் தன்னுடைய உரையிலிருந்தே முரண்படுகிறார்.

“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு வலிந்து மலரை மனதிற்கு உருவகப்படுத்தி, அன்பால் நினைத்தவர்களின் உள்ளக் கமலத்தின்கண்ணே தோன்றுவான் என்று பொருள் கூறுகிறார். இது பொருந்தாது. என்னை?

மலர்மிசை ஏகினான் என்பதற்கு நேரிடையான பொருள் இருக்க ஏன் உள்ளக் கமலத்தை உருவகிக்க வேண்டும். இங்குதான், பரிமேலழகரின் உள்ள கிடக்கை வெளிப்படுகிறது. எங்கே இந்த உரை பிறிதொரு கடவுளைக் குறிக்குமோ என்று வலிந்துப் பொருள் கூறி பின்வந்த எல்லோரையும் மயக்கம் படச் செய்திருக்கிறார்.

இங்கு பரிமேலழகரை குறை சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. உரையாசிரியர்களிடம் மிகவும் முக்கியமாக இருக்கவேண்டியத் தகுதி, காய்தல் உவத்தல் அகற்றி உண்மையான உரை வகுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், பரிமேலழகர் தான் சார்ந்த சமயத்தின்பார் மிக பற்று கொண்டு, உண்மை உரைக்காமல், வலிந்து உரை வகுத்திருக்கிறார்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். கடவுள் பக்தனின் உள்ளத் தாமரையில் அமர்ந்திருப்பவனேயன்றி நடப்பவன் அல்ல. தமிழ் நல்நெஞ்சங்கள் இந்த உண்மையை மனதிற்கொண்டு மறுபடியும் அக்குறளைப் படிக்குமாறுக் வேண்டிக்கொள்கிறேன்.

“மலர்மிசை அமர்ந்தானது” என்று குறள் இருந்திருக்குமானால், பரிமேலழகர் தன் விரிவுரையில் கையாண்ட உருவகம் நன்று அமைந்திருக்கும். நாமும் இந்தக் கட்டிரையை எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.


அருகன்

சரி. பரிமேலழகர் தன் விரிவுரையில் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பிறிதொரு கடவுள் யார்?. அவைகளை ஈண்டு விளக்குவோம்.
அந்த பிறிதொரு கடவுள் - சமண கடவுளான அருகன் தான் அவர். ஏன் அத்தொடர் மற்ற சமயக் கடவுளரைக் குறிக்காதா? எனில், குறிக்காது! அதற்கு இலக்கிய சான்றுகள் அரண் செய்யவில்லை.

என்செய்ய?

அப்படியானால், அத்தொடர் அருகனை குறிப்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றனவா? இருக்கிறது! நிறைய இருக்கிறது!!

அவற்றையும் ஈண்டு குறிப்போம்.



இலக்கிய முதன்மைச் சான்றுகள்

ஒன்று:

குறள் தோன்றிய காலத்திற்கு சற்று பின்னே தோன்றியதாகக் கருதப்படும் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், நாடுகாண் காதையில்,

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது” - நாடுகாண் காதை (200 - 205)

இங்கு ஒன்றை நினைவுப் படுத்த விரும்புகிறேன். அஃதாவது, இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் பல சமயக் கடவுளர்களைப் போற்றிப் பாடியிருக்கிறார். ஆனால், மலர்மிசை நடந்தான் என்ற சொற்றொடரை அருகக் கடவுளை தவிர வேறொரு கடவுளருக்கு பயன்படுத்தினாரில்லை. இது இலக்கியச் சான்றுகளில் முதன்மையுடைத்து என்பதில் ஐயமுண்டோ?


இரண்டு:

ஐச்சிறுங்காப்பியங்களில் முதலாக வைத்து எண்னப்படுவது “சூளாமணி” என்னும் நூலாம். இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றென வைத்திருக்க வேண்டியத் தகுதி இதற்குண்டு. தமிழில் தோன்றிய எல்லா காப்பியங்களிலும் மிக சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டது இந்நூல். எனக்கு மிகவும் பிடித்த நூற்களில் இதுவும் ஒன்று. இந்நூலிலிருந்தும் சான்றுத் தருவோம்.

இரதநூபுரச் சருக்கத்தில்,

“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” - 187
என்றும்,

“முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” - 188
என்றும்,

“மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” - 189
என்றும் குறித்திருப்பதைக் காணலாம்.


மூன்று:

அறநெறிச்சாரம் என்ற நூலின்கண் அமைந்த கடவுள் வாழ்த்தில்,

“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” - (1)
என்று வருவதைக் காணலாம்.

நான்கு:

அவிரோதி ஆழ்வார் அருளிய “திருவெம்பாவை” என்னும் நூலில்,

“வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்” - (9)
என்று வருவதையும் காணலாம்.


ஐந்து:

ஜீவசம்போதனை என்னும் நூலின்கண் அமையப் பெற்ற பாடல்,

“பன்னிரண்டு மாகணமு மேத்தப்பைந் தாமரைடின்
சென்னி மிசைநடந்த சேவடியை
- யுன்னியுயி
ரல்லாத அன்னியமே யென்னும் மதிகாரம்
நல்லா யினியுரைப்ப னன்கு” - (185)
என்ற பாடலாலும் இஃது பெறப்படும்.


ஆறு:

திருப்பாமாலை” என்னும் நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலில்,

“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” - (1-5)
என்றும்,

“மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை

மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே”
என்று வருவதும் நோக்குக.


ஏழு:

உதீசி தேவர் அருளிய திருக்கலம்பகம் என்னும் நூலில்,

“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - (74)
என்றும் வருவதைப் பார்க்கவும்.


எட்டு:

தோத்திரத் திரட்டு என்னும் நூலில்,

“தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - (6)
என்றும்,


“திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” - (11)
என்று வருவதையும் காணலாம்.


ஒன்பது:

திரு இரட்டைமணி மாலை என்னும் நூலில்,

‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப்
பாடிப் பணிந்து” - (1)
என்று வருவதையும் காணலாம்.


பத்து:

நிகண்டு நூற்களில் தலைச்சிறந்ததாகக் கருதப்படும் “சூடாமணி நிகண்டு” அருகனின் பெயர்களைக் கூறும்போது பின்வருமாறு கூறுகிறது!

“அநகன், எண்குணன், நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
பூமிசை நடந்தோன் போதன்..” - (9)

இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள அனைத்து நிகண்டுகளும், “மலர்மிசை நடந்தவன்” என்று அருகக் கடவுளையும், புத்தபிரானையும் தான் பகர்கின்றன.

இன்னும் நிறையச் சமண நூற்களில் இருந்து சான்றுகள் காட்டமுடியும். சீவக சிந்தாமணி ஒன்றே போதும், நிறைய சான்றுகள் காட்டலாம். விரிவஞ்சி இங்கே விடுத்தனம்.

முடிபு:

முடிபாக, இக்கட்டுரையைப் படித்தவர்களில் சிலருக்கு இன்னும் மனம் ஒப்பாது இருக்கலாம். அவர்களுக்கு நாம் சொல்வது இதுதான்; பக்திக்கு முக்கியம் கொடுத்து வளர்ந்த சமயங்களில் இச்சொல்லாட்சி பயின்று வராமை ஏன்? “மலர்மிசை ஏகினான்” என்ற சொற்றொடரை பொன்னேபோல் போற்றி தத்தமது நூற்களில் பயன்படுத்தாமை ஏன்? போன்ற கேள்விகளை தாங்கள் தங்களுக்குள்ளேயே கேட்டு அதற்கு தக்க பதிலை கண்டு கொள்ளுமாறு சொல்லுதும்.

அருகனுக்கும் புத்தனுக்கும் “மலர்மிசை ஏகினான்” பொருந்தும் என்றாலும், திருக்குறளின் உள்ள அதிகாரத்தை, குறிப்பாக புலால் உண்ணாமை போன்ற அதிகாரத்தை நோக்குங்கால், அச்சொற்றொடர் அருகனையேக் குறிக்கும் எனபதில் ஐயமில்லை. என்னை?


இரா. பானுகுமார்,
சென்னை

Thursday, June 07, 2007

தொல்காப்பியர்

தொல்காப்பியர்


தமிழில் தோன்றிய இலக்கண நூற்களில் மிக தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாம். எனவே செந்தமிழின் முதல் இலக்கண நூல் இது என்பதில் ஐயமில்லை. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் என்பார். இவர் காலத்தை நிச்சயித்து கூற இயலவில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி, இவரின் கால வரையரை கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை இருக்கலாம்.


அவருடைய சமயம்

இக்கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியரின் சமயம் யாது என்பதை அவரின் நூலின் கண்ணே நேரிதின் ஆராய்ந்து கூறுவதுதான். பல அறிஞர்கள் பலவிதமாக கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும் அவற்றின் வழியே செல்லாமல் என் அறிவிற்கு எட்டியவரை ஆராய முற்பட்டுள்ளேன். இக்கட்டுரையை முடிந்த முடிபாக எண்ணாமல், இதன் கண் கூறப்பட்டுள்ள கருத்துக்களை சீர்த்தூக்கிப் பார்த்து, தக்கவையென்றால் வரவேற்று, முரணெனில் அவைகளைச் சுட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன். அக்கருத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஈண்டு பார்ப்போம்.


சமண சமயம் அல்லது சைன சமயம்

ஒரு நூலின் ஆசிரியர் சமயம் அறிய அந்த நூலில் உள்ள கடவுள் வாழ்த்துத்
துணைப் புரியும். காட்டாக, “பல்கலைக் குரிசில் பவணந்தி” என்று போற்றப்பட்ட நன்னூல் ஆசிரியர் தன் நூலின் எழுத்ததிகார தொடக்கத்தில்,

“ பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே”

என்று தொடங்குகிறார். இப்பாடல் சமண கடவுளான அருகனை வணங்குகிறது. ஆகையால், நன்னூல் ஆசிரியர் சமண மதத்தவர் என்பது பெறப்படும். அவ்வாறே, மற்ற நூலின் கண் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பார்த்து அந்த நூல் எச்சமயம் சார்ந்தது என்பதை எளிதில் உள்ளலாம். இக்கருத்து கடவுள் வாழ்த்துள்ள நூற்களுக்கு பொருந்தும்.

கடவுள் வணக்கம் கூறப்படாத நூற்களுக்கு?

காட்டாக தொல்காப்பிய நூலில் கடவுள் வணக்கம் கூறப்படவில்லை. தமிழுக்கு இலக்கணம் கூற வந்த நூலாசிரியர் கடவுள் வணக்கம் கூறாமற்விட்டார் போலும். (கூறாமல் விட்டாரா? அல்லது பின்னாளில் அழிக்கப்பட்டதா?)

ஒரு நூலில் கடவுள் அல்லது இறை வணக்கம் கூறாமல் விட்டிருந்தால் அந்நூலின் கண் அமைந்த முதன்மைக் கருத்துக்களைக் கொண்டோ, சிறப்புப் பாயிரம் மூலமோ, உரையாசிரியரின் உரை மூலமாகவோ ஒருவாறு அந்நூலின் ஆசிரியர் சமயத்தை நிறுவலாம். இம்முறை சரியானது என்று கூறமுடியாது. பல முரணானக் கருத்துக்கள் அமையக்கூடும். ஆனாலும் வேறு வழியில்லையாதலால், யானும் அம்முறையே மேற்கொள்கிறேன்.


சிறப்புப் பாயிரம்

“வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே”

இப்பாயிரத்தில் ஆசிரியரின் சமயம் பற்றி அறிய “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரும், “பல்புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரும் வகை செய்கிறது.


“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பதில் “ஐந்திரம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது? அதன் பொருள் என்ன?




ஐந்திரம்

ஐந்திரம் பற்றி பலதரப்பட்ட பொருட்கள் கூறப்பட்டாலும், ஐந்திரம் என்பதற்கு தொல்காப்பியத்தின் உள்ள ஆதாரத்தைக் கொண்டு ஆராயப்படவேண்டும். இதை சில அறிஞர்கள் கருத தவறிவிட்டார்கள். அஃதென்ன?


ஐந்திரம் என்பது வடமொழி இலக்கணம் என்றும், அது பாணினியின் இலக்கணத்திற்கும் முந்தயது என்றும் உரைப்பர் சில அறிஞர்கள். இங்கு ஒன்றைக் குறிக்க விரும்புகிறேன். இந்திய வரலாற்றில் எப்படி வைதிகச் சமயங்கள், அவைதிக சமயங்கள் என்று இரண்டு பிரிவு உள்ளனவோ, அப்படி இலக்கிய உலகிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவை இரயில் வண்டியின் தண்டவாளத்தைப் போல. என்றுமே சேராது, ஆனால் அருகருகே பயணிக்கும். அதுப்போல் இலக்கணத்திலுமாம். ஐந்திரக் கோட்பாடு என்பது சமணம் சார்ந்தது. பாணினி என்பது வைதிகம் சார்ந்தது. (ஐந்திரத்திற்கும் முன்னாலேயே “சாகடாயணம்” என்ற சமண இலக்கண நூல் இருந்தது என்பது சமணர்தம் நம்பிக்கை).

மேலும், ஐந்திரம் என்பது இந்திரனால்* எழுதப்பட்ட இலக்கணம் என்பது சமணர்களின் நம்பிக்கம்.

(*சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், காடுகாண் காதை, 155, “கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்” என்ற வரியை நோக்குக. )

இந்நம்பிக்கையின்படி ஐந்திரம் என்பது இந்திரனால் எழுதப்பட்ட இலக்கண நூல் என்பதாகிறது. இக்கருத்து எனக்கு உடன்பாடன்று. ஐந்திரம் என்பது இங்கு நூலைக் குறிக்கா. “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற தொடரில் நிறைந்த என்பது குணத்தைக் குறிக்கவேண்டும் என்பது என் தாழ்மையானக் கருத்து.

எப்படியெனில், ஐந்திரம் என்பது சமண முனிவர்களுக்குரிய உறுதிப்பாடுகளான ஊறன்மை, வாய்மை, களவாமை, மணவாமை, தவம் என்ற ஐந்து சால்புகளைக் குறிக்கும். இந்த ஐந்து பண்புகளால் நிறைந்த தொல்காப்பியன் என்பதைத்தான் அந்த சிறப்புப் பாயிரம் குறிக்கிறது என்பது என் கருத்து.

பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் ஐந்திரம் என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும் என்பார். உலகாய்தத்தோடு தொடர்புப்படுத்துவார். இதுவும் பொருந்தா. பஞ்ச பூதங்களை உலகாய்த சமயம் மட்டும் போற்றுவதில்லை. பஞ்ச பூதங்களை, பஞ்சஸ்த்திகாயம் என்று சமணமும் போற்றும். ஆதலால், ஐந்திரம் என்பது உலகாய்தத்துக்கும், பூதவியலுக்கும் மட்டும் சொந்தமில்லை என்பதாகிறது.



படிமையோன்

பல் புகழ் நிறுத்த படிமையோனே” என்ற தொடரில் படிமையோன் என்பதை சிறிது விளக்குவோம்.

படிமையோன் என்பதை தொல்காப்பியத்தின் முதம் உரையாசிரியரான “இளம்பூரணார்” என்ற சமண ஆச்சாரியர் “தவ ஒழுக்கத்தினை உடையோன்” என்று பொருள் கொள்கிறார். இது சமண முனிவர்களின் தவவொழுக்கத்தை கூறும் சமண சொல்லாட்சி. இது சமண சார்புடைத்து. “பிரதிமயோகம்” என்று
அவை சுட்டும். அத்தவத்தை மேற்கொள்ளும் முனிவர்களுக்கு “பிரதான யோகதாரி” என்றும் சுட்டும். தவவொழுக்கத்தில் முற்றியவர்கள் மேற்கொள்ளும் ஒருவகை தவம் அது. அதனால் பல்புகழ் என்பது அத்தவத்தையே குறிக்குமாம்.



நூல் அகச்சான்று 1


தொல்காப்பியர் முதல் நூல் பற்றிச் சொல்ல வரும்போது இவ்வாறு கூறுகிறார்.

வினையின் நீங்கி1 விளங்கிய அறிவின்2
முனைவன்3 கண்டது முதல்4நூ லாகும்


என்றுக் குறிக்கிறார். இத்தொடர்ப் பற்றி பல சமய அறிஞர்கள் பலவாறு எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக சைவர்கள் இத்தொடர் சிவபிரானைக் குறிக்கிறது என்கிறார்கள். இது பொருந்தாது. எவ்வாறெனில், அதை விளக்குவோம்.

வினையின் நீங்கி1 = வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்ட, அஃதாவது, வினைக்கட்டுகளால் சில காலம் உட்பட்டு, பின் அதனில் இருந்து விடுபட்டு,

விளங்கிய அறிவின்2 = அவ்வாறு வினைகளில் இருந்து விடுபட்டதினால் எழுந்த/தோன்றிய ஞானத்தின் (அறிவின்),

முனைவன்3 = முனிவன், ஆசிரியன், முதல்வன்,

கண்டது முதல் நூலாகும்4 = அந்த முனிவனால் எழுதுவிக்கப்பட்டது அல்லது செய்விக்கப்பட்டது முதல் நூலாகும்.

தொகுப்பாக, வினைக்கட்டுகளிலிருந்து விடுப்பட்டதினால் எழுந்த ஞானத்தைக் கொண்டு முதல்வன் எழுதியது முதல் நூல் என்பது மேலே கூறியத் தொடரின் கருத்து.

இக்கருத்து சிவபெருமானுக்கு பொருந்தா. சிவபெருமான் “பிறவா யாக்கை பெரியோன்”. அதனால் வினையின் நீங்க வேண்டா. அதனால் வினையின் நீங்கி விளங்கும் ஞானமும் வேண்டா. மேலும் அவர் நூல் இயற்றினார் என்று சத்தியப் பிரமாணம் இல்லை.

முடிபாக, இத்தொடர் அருகக் கடவுளைக் குறிக்கிறது. எங்ஙனமெனில்?

சமணத்தின் முதல் கடவுளாகப் போற்றப் பெறுபவர் “ஆதிபகவன்” என்றழைக்கப்படும் ரிஷப தேவராவார். இவரே இப்பரதக் கண்டத்தின் முதல் பேரரசரும் ஆவார். இவரே இந்த உலகியல்பை தோற்றுவித்தார். ஆறு தொழில்களைக் கற்பித்தவர். இல்லறம், துறவறம் என்ற பிரித்து மக்களுக்கு அறம் உரைத்தவர். இவரே எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். இவரே முதல் துறவரசரும் ஆவார்.

இல்லறத்தை நடாத்திக் காட்டி, பின் துறவேற்று, வினைக்கட்டுகளில் இருந்து விடுப்பட்டு வாலறிவு என்னும் கேவல ஞானத்தைப் பெற்றார். கோட்டம் என்று அழைக்கப்படும் ‘சமவசரண”த்தில் அறம் பகர்ந்தார். இவர் அறம் “திவ்விய தொனி”யாக வெளிப்பட்டு, கணதரர்கள் வாயிலாக ஆச்சாரியர்களால் வெளியிடப்பட்டது ஆகமங்களாகும். இவர் முதன் முதல் இலக்கண நூலைச் செய்தருளினார் என்று ஸ்ரீபுராணம் சுட்டும். இதனால், மேலே சொன்ன தொடர் அருகக் கடவுளைக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிக்கனி.



நூல் அகச்சான்று 2


தொல்காப்பியர், மரபியல் 27-33 ஆம் சூத்திரத்தில் உயிர்களை வகைப்படுத்துகிறார். அச்சூத்திரம் கீழ்வருமாறு.

"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே".

"புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கு அறிவின
வேபிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே".

இவ்வகுப்புச் சமணச் சார்புடையது. நீலகேசி, மேருமந்திரப் புராணம் ஆகிய நூட்களில் இவ்வாறான பகுப்பை நோக்குக.

உயிர்களின் இப்பகுப்பு முறை வைதிக இலக்கியங்களில் கிடையாது. இஃதொன்றே சாலும் தொல்காப்பியர் சமணர் என்று.



நூல் அகச்சான்று 3


தொல்காப்பிய நூன் மரபு 7ஆம் சூத்திரத்தில் இவ்வாறு குறிக்கிறார்.

“கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே”

இவ்வாறு மாத்திரை அளவுகளாக கைநொடித்தலும், கண் இமைத்தலையும் குறிப்பது சமண சமயக் கோட்பாடு. காட்டாக, பட்டாகளங்கர் என்னும் சமணர் தம் “சுப்தானு சுசுநந்தம்” என்னும் கன்னட இலக்கண நூலில் மாத்திரை அளவுகளாக கைநொடித்தலையும், கண்ணிமைத்தலையும் குறித்திருக்கிறார். அதற்கு தம் நூலில் ஒரு பிராகிருத நூலில் இருந்து ஒரு மேற்கோளும் காட்டுகிறார். (வையாபுரியார்). சமணர்கள் தம் நூலிற் கோட்பாடுகளை மேற்கோள்களாகக் காட்டுமிடத்து தம் சமய நூலில் இருந்துதான் சான்று தருவார்கள் என்பதால் இக்கருத்தும் சமணமாம்.


நூல் அகச்சான்று 4


தொல்காப்பியத்தில் வரும் “னகர இறுவாய்”, “பாட்டிடைக் கலந்த பொருள ஆகி பாட்டின் இயல பண்ணத்திய்யே”, “கந்தழி”, “ஊழ்வினைக் கொள்கை”, “காலம் உலகம் உயிரும் உடம்பே”, நிலையாமை கொள்கை” போன்றவற்றைப்
பார்க்கும்போது இவர் நிச்சயம் சமண மதத்தவர் என்பது தெரிகிறது.

1. “னகர இறுவாய்” = ஆண்பாலைத் தொக்கி நின்றது என்பார் இளம்பூரணார். சமணத்தில் (திகம்பர சமணம்) பெண்பாலுக்கு வீடுபேறில்லையாதலால்.

2. “பாட்டிடைக் .... பண்ணத்திய்யே” = பண்ணத்தி என்பது ஒரு வகை செய்யுள். சமணர்கள் இதை அதிகம் கையாண்டிருக்கிறார்கள். மற்ற வைதிகச் சமயத்தார் எடுத்தாண்டதாக தெரியவில்லை.

3. “கந்தழி” = “நிர்கந்தர்” என்பதன் நேரிடையான தமிழ் மொழிப்பெயர்ப்பு.



சமணரே

மேற் சொன்னக் கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தொல்காப்பியம் செய்த தொல்காப்பியனார் சமணர் (ஜைனர்) என்பதுப் புலப்படும்.


இரா.பானுகுமார்,
சென்னை.

Thursday, May 31, 2007

தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!

சமணரின் தமிழ் தொண்டு!


தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள் ஆற்றிய தொண்டு நான்கு வகைப்பட்டது.

1. இலக்கணத் தொண்டு
2. இலக்கியத் தொண்டு
3. அற இலக்கியத் தொண்டு
4. உரைத் தொண்டு

என்று உரைப்பார் பேரா. க.ப.அறவாணன் அவர்கள்.

திராவிட மொழியின் அரும் பெருமையை உலகிற்கு எடுத்து இயம்பிய கால்டுவெல் துரை மகனார் தம் நூலில் “சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது, அரசியிலில் அன்று; கல்வித் துறையிலும், அறிவுத் துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்” எனப் போற்றியுள்ளார்.

இவர்கள் இவ்வாறு கூற என்ன காரணம்? அதற்கு என்ன ஆதாரம்? அதையும் இங்கு சிறிதுப் பார்ப்போம்.

தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். கீழ்வருவனவற்றைப் பார்த்தாலே உண்மை விளங்கும்.



சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : காவியங்கள், புராணங்கள்

1. சிலப்பதிகாரம்
2. சீவகசிந்தாமணி
3. நரி விருத்தம்
4. சூளாமணி
5. பெருங்கதை
6. *வளையாபதி
7. மேருமந்திரபுராணம்
8. *நாரதர் சரிதம்
9. உதயணகுமார காவியம்
10. நாககுமார காவியம்
11. கலிங்கத்துப் பரணி
12. யசோதர காவியம்
13. *இராமகதை (ஜைன இராமாயணம்)
14. *கிளி விருத்தம்
15. *எலி விருத்தம்
16. *இளந்திரையம்
17. *புராண சாகரம்
18. *அமிர்தபதி
19. *மல்லிநாதர் புராணம்
20. *பிங்கல சரிதை
21. *வாமன சரிதை
22. *வர்த்தமானம்


சமணர்கள் அருளிய இலக்கண நூல்கள்:

23. தொல்காப்பியம்
24. நன்னூல்
25. நம்பியகப் பொருள்
26. யாப்பருங்கலம்
27. யாப்பருங்கலக்காரிகை
28. நேமிநாதம்
29. அவிநயம்
30. வெண்பாப்பாட்டியல்
31. *சந்த நூல்
32. *இந்திரகாளியம்
33. *அணியியல்
34. *வாய்ப்பியம்
35. *மொழிவரி
36. *கடியநன்னியம்
37. *காக்கைப்பாடினியம்
38. *சங்கயாப்பு
39. *செய்யுளியல்
40. *நத்தத்தம்
41. *தக்காணியம்
42. *பேரகத்தியம்


சமணர்கள் அருளிய அற நூல்கள்:

43. திருக்குறள்
44. நாலடியார்
45. பழமொழி நானூறு
46. ஏலாதி
47. சிறுபஞ்சமூலம்
48. திணைமாலை நூற்றைம்பது
49. ஆசாரக் கோவை
50. அறநெறிச் சாரம்
51. அருங்கலச் செப்பு
52. ஜீவ சம்போதனை
53. அகத்தில் சூடி
54. நாண்மணிக்கடிகை
55. இன்னா நாற்பது
56. இனியவை நாறபது
57. திரிகடுகம்
58. கல்வி ஒழுக்கம்


சமணர்கள் அருளிய தர்க்க நூல்கள்:

59. நீலகேசி
60. *பிங்கலகேசி
61. *அஞ்சனகேசி
62. தத்துவ தரிசனம்


சமணர்கள் அருளிய இசை நூல்கள்:

63. *பெருங்குருகு
64. *பெருநாரை
65. *செயிற்றியம்
66. *பரதசேனாதிபதியம்
67. *சயந்தம்
68. *இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை
69. *இசைநுணுக்கம்
70. *சிற்றிசை
71. *பேரிசை


சமணர்கள் அருளிய பிற இலக்கிய வகைகள்: (நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம் மற்றும் நாடகம்)

72. திருக்கலம்பகம்
73. தோத்திரத்திரட்டு
74. திருநூற்றந்தாதி
75. திருவெம்பாவை
76. திருப்பாமாலை
77. திருப்புகழ்
78. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
79. அப்பாண்டைநாதர் உலா
80. திருமேற்றிசையந்தாதி
81. *தர்மதேவியந்தாதி
82. திருநாதர் குன்றத்துப் பதிகம்
83. மயிலாப்பூர் பத்து
84. திருமயிலைப் பத்து
85. கொங்கு மண்டல சதகம்
86. நேமிநாத சதகம்
87. சூடாமணி நிகண்டு
88. திவாகரம்(சேந்தன் திவாகரம்)
89. பிங்கலாந்தை(பிங்கல நிகண்டு)
90. கெட்டிஎண் சுவடி
91. *கணக்கதிகாரம்
92. நல்லிலக்க வாய்ப்பாடு
93. சிறுகுழி வாய்ப்பாடு
94. *கீழ்வாய் இலக்கம்
95. *பெருக்கல் வாய்ப்பாடு
96. *அவினந்தமாலை
97. ஜினேந்திரமாலை
98. *உள்ளமுடையான்
99. *பார்சுவநாத மாலை
100. *ஓவிய நூல்
101. *கலைகோட்டுத்தண்டம்
102. *அமுதசாகரம்
103. வச்சணந்திமாலை
104. *குணா நூல்
105. *அகத்தியம்
106. *கூத்தநூல் சந்தம்
107. *பத்மாவதிதேவியந்தாதி


* குறியிட்ட நூற்கள் மறைந்தொழிந்தன.

உரையாசிரியர்களின் உரையின் மூலம் அறியப்பட்ட நூற்கள் தான் மேலே
கூறப்பட்டவை. இதில் சில நூற்கள் விடுப்பட்டுள்ளன. நா.கணேசனாரை கேட்டால் இன்னும் தகவல்கள் கொடுப்பார்.

மேற்சொன்ன தகவல்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு, வெளியிடப்பட்ட “தமிழரசு” (1.11.1974, தீபாவளி சிறப்பிதழ்) என்னும் பத்திரிகையில் இருந்து எடுத்து இங்கு தரப்பட்டுள்ளன.

இதனால் சமணரின் தமிழ்த் தொண்டு எத்தணை பெரியது, பரந்துப்பட்டது என்பது புலப்படும்.


இரா.பானுகுமார்,
சென்னை.

Wednesday, May 30, 2007

இலங்கையில் சமணம்

இலங்கையில் சமணம்



இலங்கையில் சமணம் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஒன்று இருந்திருக்க முடியாது என்று ஒரு சாராரும், இலங்கையில் இருந்திருக்கிறது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள். இலங்கையில் இல்லை, இருந்திருக்க முடியாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் மிக முக்கியமானது.


அந்த காரணம்தான் என்ன?

சமண முனிவர்கள் கடல் தாண்டக் கூடாது என்பது முனிவிரதங்களில் ஒன்று. சமண முனிவர்கள் தங்கள் கடமைகளில் இதை கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும். ஆகையால், இலங்கையில் சமண அறம் பரவியிருக்க முடியாது என்பது அவர்களது வாதம்.

இரண்டாவது காரணம், சமண முனிவர்கள் சமண இல்லறத்தார் (சிராவகர்கள்)இருக்கும் இடங்களுக்குத்தான் செல்வார்களேயன்றி சமண இல்லறத்தார் அல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. அவர்களுக்கு ஆகாரம் இல்லறத்தாரைச் சார்ந்தது. சமண இல்லறத்தாரிடம் மட்டுமே அவர்கள் ஆகாரம் உட்கொள்வார்கள். அதுபோலவே இல்லறத்தார் சமண முனிவர்களைச் சார்ந்து தான் வாழ முடியும். அவர்களின் சிறு சிறு விரதங்கள் கூட சமண முனிவர்கள் அனுமதிப் பெற்றே கடைப்பிடிக்க வேண்டும். இதனால், இரண்டு பிரிவனரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க முடியும். இதை அறநெறிச்சாரம் என்ற தமிழ் சமண நூல் ஒரு பாடலில் அழகாக சுட்டும்.

இந்தக் காரணங்களினால் தான் சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றும் உண்மையானது தான். மறுக்க முடியாது! என்னை?



இலங்கையில் இருந்திருக்கிறது!


இப்போது மற்றொரு சாராரின் கருத்தையும் ஈண்டு பார்ப்போம். இலங்கையில் ஒரு காலத்தில் சமணம் நிலைக் கொண்டிருந்தது தான் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்:

மகாவம்சம் என்ற நூல் பெளத்த நூல். இலங்கையில் வாழ்ந்த பெளத்த அரசர்களின் வரலாற்றை கூறும் நூலது. இந்நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்நூல் வழி சமணம் கி.மு.4ஆம் நூற்றாண்டிலேயே இலங்கையில் இருந்தமை அறியப்படுகிறது. "பாண்டுகாபயன்" என்பவன் கி.மு. 377-307 வரை இலங்கையை ஆண்ட அரசன். இவன் அனுராதபுரம் என்ற புதிய தலைநகரத்தை அமைத்தான். அந்த புதுத் தலை நகரத்தில் சைன முனிவர்களுக்கென்று தனியாகப் பள்ளிகள், கோயில்கள் கட்டித்தர ஆணையிட்டான் என்று அந்த நூல் கூறுகிறது. மேலும் அந்த அரசனின் ஆணையின் பேரில் "நிகந்தமலை" என்ற இடத்தில், 'நிகந்த ஜோதிய", "நிகந்த கும்பண்ட" என்ற சமண முனிவர்களுக்கு தனி தனியே பள்ளிக்கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்பள்ளிகளுக்கு அந்த அரசனின் பெயரே சூட்டப்பட்டதாக அந்நூல் மேலும் கூறுகிறது.

இவற்றுடன் "ஆசிவகர்களு"க்காகவும் தனியே இடங்களும் கட்டித்தரப்பட்டதாகவும் அது கூறுகிறது.
- Geiger - Mahavamsa, page 97,98,99

(சமணர்கள் என்றால் அது ஆசிவகர்களையும் குறிக்கலாம் தானே என்று சிலஅறிஞர்கள் நினைக்கலாம். நிர்கந்தர்கள் என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும். நிர்கந்தம், நிர்கந்தர், நிகண்ட, நிகண்டம், நிகண்டவாதிகள் என்பதெல்லாம் சைனத்தையேக் குறிக்கும். மேலும், சமண, ஆசிவக முனிவர்களுக்கென்று தனி தனியே இடங்கள் கட்டித்தரப்பட்டிருப்பதால் "நிகந்த முனிவர்கள்" என்பது சைன முனிவர்களையேக் குறிக்கும் என்பது அங்கை நெல்லிகனி.)

இதற்கு முன்னமே சமணம் இலங்கையில் கால்கொண்டிருந்தது என்பார் D.G.Mahajan. இவர் "Historical References to Jainism in Lanka Dwip, the Ancient Ceylon, in Buddhist Scriptures" என்ற நூலில் அனுராதபுரத்தில் உள்ள "அபயகிரி தூபத்தில்"கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவைகள் இரண்டும் சைன முனிவர்களின் சிலைகள் என்றும், அவற்றில் ஒன்று சிரவணபெளகோலாவில் உள்ள கோமதேசுவரை ஒத்திருக்கிறது என்கிறார்.


என் கருத்து:

இக்காரணங்களால் கி.மு. 4ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே சமணம் இலங்கையில் நிலைக்கொண்டிருந்தது என்பது பெறப்படுகிறது. இந்த இரண்டு கருத்துகளும் சரியே. இலங்கை இந்திய கண்டத்தில் இருந்து தனியே பிரியும் முன்னர் சமணம் அங்கே கால் கொண்டு இருந்திருக்கலாம். அது தனியாக பிரிந்த பிறகு சமண முனிவர்களின் வரத்து அற்று போன படியால், பிற்காலத்தில் இலங்கையில் சமணம் மறைந்திருக்கலாம். தற்போது இலங்கையில் உள்ள சில ஊர்களின் பெயர்களில் சமண சொல்லாட்சியும் இதை உறுதிப்படுத்தும். தற்கால சைவர்கள் முன்னம் சமண சிராவகர்களாக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பார் மயிலையார்.


அன்புடன்,

இரா.பானுகுமார்,
சென்னை.

Monday, April 16, 2007

அட்சய திருதியை

அட்சய திருதியை


ஆதிபகவன்


நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார்.
இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக
மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக
மரத்தை நாடி வேண்டியதைப் பெற்று வாழலானார்கள்.


கர்ம பூமி

இவ்வாறாக மக்கள் எந்த உழைப்புமின்றி வாழ்ந்தக் காலத்தில் கற்பக மரங்கள் மறையத் தொடங்கின. இதனால், மக்கள் செய்வதறியாது, தங்களின் அரசனான ஆதிபகவனை அணுகி, தங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டனர். பகவானும் அவர்கள் நிலையுணர்ந்து ஆறு தொழில்களை கற்பித்தார். இதனால், அவர் யுகாதி நாதர் என்று அழைக்கப்படலானார். ஆறு தொழிற்களை கற்பித்த அந்த நன்னாள் யுகாதி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாட்டில் தோன்றிய எல்லா சமண இலக்கியங்களிலும் இச்செய்தியைக் காணலாம். தமிழில் தோன்றிய சமண இலக்கியங்களும் இதனை கூறுகின்றன. சீவக சிந்தாமணி, சூடாமணி நிகண்டு, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூட்களில் இச்செய்தி வருவதைக் காணலாம்.


விரிவஞ்சி, எடுத்துக்காட்டாக ஒன்றை ஈண்டு சுட்டுகிறேன்.


“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்



துறவறம்

இவ்வாறாக உலக மக்களுக்கு முதன்முதல் ஆறு தொழில்களைக் கற்பித்ததால், இவருக்கு ஆதிபிரம்மா, யுகாதிநாதன், பிரஜாபதி, ஆதிதேவன், ஆதிநாதர், ஆதிராஜர், ஆதிபகவன், ஆதிசக்கரவர்த்தி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படலானார்.

குறளாசிரியர் தேவர் பெருமானும், இதனைக் குறிக்கவே முதல் குறளாக,

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்ற குறளினை அமைத்தமை இங்கு சிந்திதற்பாலது.

இல்லறத்தில் இன்பம் துய்த்து, சிறப்புற அரசாட்சி செய்து
வருங்கால், ஒரு நாள் அரண்மனையில், “நீலாஞ்சனை” என்னும் நாட்டிய பெண்ணின் நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றத்தின் பாதியிலேயே அப்பெண் அகால மரணம் அடைகிறாள். இதனால் அதிர்ச்சியுற்ற ஆதிராசருக்கு அக்கணமே
வைராக்கியம் ஏற்படுகிறது. தன் முதல் மகனான பரதனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, அரச வாழ்வைத் துறந்து துறவேற்கிறார்.



ஆகார தானம்

அவ்வாறு அரச வாழ்வைத் துறந்த விருஷபதேவர், நாட்டை விட்டு அகன்று காட்டில் வாழலானார். மெளனம் ஏற்றார். தொடர்ந்து ஆறு மாதங்கள் நின்ற வண்ணமே (கயோத்சர்கம்) தவம் ஏற்றலானார். ஆறு மாதங்கள் கழிந்தப் பிறகு ஆகாரம்
ஏற்க (பாராணை விதி) நாட்டுக்கு வருகிறார். மக்கள், இதற்கு முன்னர் துறவியர்களைக் கண்டதில்லையாதலால், ரிஷபநாதரை
இன்னும் அரசராகவே கருதி அவருக்கு தங்களிடம் உள்ள
விலை உயர்ந்த பொருட்களை அளிக்க முன்வந்தனர். இதனால்,
மீண்டும் தவத்தினைத் தொடரலானார். இவ்வாறாக மேலும் ஆறு மாதங்கள் கழியலாயின.



தான தீர்த்தங்கரர்

இங்கு ஒன்றைக் குறிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, சமண துறவிகள் பாராணை செல்லும்போது எந்த இல்லறத்தான் வீட்டின் முன்பும் நிற்க மாட்டார்கள். அதுபோல் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் வழியேச் செல்வார்கள். அத்துறவிகளைக் கண்ட இல்லறத்தான் தானே முன்வந்து அவர்களுக்கு ஆகாரத் தானம் கொடுக்க வேண்டுமேயன்றி துறவிகள் தாமாக யாரிடமும் சென்று உண்ண கூடாது என்பது சமணத் துறவிகளின் விதி. ஆகாரம் ஏற்கும்போது, நின்று கொண்டு தன் இருகைகளால்தான் உணவு ஏற்கவேண்டும். பாத்திரம் ஏதும் உபயோகப்படுத்தக் கூடாது.

அவ்விதியின்படி, மீண்டும் பாராணை ஏற்க அஸ்தினாபுரம் வருகிறார் விருடபதேவர். அச்சமயம், அந்நாட்டின் இளவரசனான, சிரேயாம்ச குமாரனுக்கு தான் முற்பிறவியில் துறவிகளுக்கு ஆகார தானம் கொடுத்த நினைவு ஏற்பட்டு, பாராணைக்காக வந்த விருஷபசுவாமிக்கு “கரும்பு சாற்றினை” அளிக்கிறான். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இளவரசன் சிரேயாம்ச குமாரன் பகவானுக்கு ஆகார தானம் அளித்ததால் “தான தீர்த்தங்கரர்” எனப் போற்றப்பட்டார்.



தான பூஜை

ஆதிபகவன் பாராணை மேற்கொண்டதை தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரனும், இதர தேவர்களும் பெருமகிழ்ச்சியடைந்து, பஞ்சாச்சரியம் பொழிந்தனர். அப்பொழுது விழுந்த விலையுயர்ந்த இரத்தின, மாணிக்க கற்களை, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். சிரேயாம்ச குமாரன் ஆகாரதானம் அளித்த அந்த நன்நாளே அட்சய திருதியாகவும் ஆகாரதானம் போற்றும் நாளாகவும் போற்றப்படுகிறது.



அட்சயதிருதியை

அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.



தானம் போற்றுவோம்

பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து "அட்சயதிருதியை" கொண்டாடுங்கள்.


- இரா. பானுகுமார், சென்னை

Wednesday, January 24, 2007

வாலறிவன்



பிறவியும் ஞானமும்



உயிர்கள் தத்தம் ஊழ்வினைப் பயனால் எண்ணற்ற ஆண்டுகள், பல பலப் பிறவிகளில்(1) உழன்று, பின் தன் நன்முயற்சியால் அவ்வினைகளை உதிர்த்து வீடு பேறு அடைகின்றன. அவ்வுயிர்கள் தன் வினைக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, வரம்பற்ற ஞானத்தில் திளைக்க, வழிக்காண முயன்றவர்கள் தான் தீர்த்தங்கரர்கள். "தீர்த்தங்கரர்" என்றால் கடலைக் கடக்க உதவுபவர்கள் என்று பொருள். அஃதாவது, பிறவி என்னும் கடலைக் கடக்க தெப்பமாக(2) /புணையாகவிருந்து உதவுபவர்கள். இவர்களையே சமணர்கள் தங்கள் கடவுளாகக் போற்றி வணங்கி வருகிறார்கள். இவர்களே தொழத்தக்கவர்கள் ஆவர்.


குணஸ்தானப் படிகள்

வீடுபேறு என்பது நாம் விரும்பிய உடனே கிடைக்கக்கூடியதல்ல. உயிர் வீடுபேறு அடைய வேண்டுமானால் தன் வினைக்கட்டுகளிலிருந்து விடுபடவேண்டும். அப்படிவிடுபட்ட உயிரே வீடு நிலை எய்தி வரம்பற்ற ஞானத்தில்(3) திளைக்க முடியும் என்பது சமணரின் கோட்பாடாகும்.

உயிர்கள் எண்ணற்ற பிறவிகளில் உழன்று, தன் முயற்சியில் தாழாது, படிப்படியாக தான், அந்த வரம்பற்ற முழுதுணர் ஞானத்தை பெற முடியுமேயன்றி, வேறு "சக்தி"(4)யுடைய உந்துதலாலேயோ, துணையாலேயோ வீடுபேறு அடைய முடியாது.

உயிர்கள் மும்மணிகளான, "நற்காட்சி", "நல்ஞானம்","நல்லொழுக்கம்", என்னும் மூன்று மணிகளைப் பற்றி படிப்படியாகத் தான் வீடுபேறு அடைய முடியும். உயிர் படிப்படியாக முன்னேறுவதை, சமணத்தில் "குணஸ்தானம்" என்பார்கள்.

ஞானம் அல்லது அறிவு

சமண கொள்கைப்படி ஞானம் (அறிவு) ஐந்து வகைப்படும்.

1. மதி ஞானம் - இயற்கையான அறிவு அல்லது ஐம்பொறியினால் அறியும் அறிவு.

2. சுருத ஞானம் - ஆகம அறிவு அல்லது நூற்களால் ஏற்படும் அறிவு.

3. அவதி ஞானம் - முற்பிறவிகளை அறியும் அறிவு.

4. மனப்பர்யாய ஞானம் - பிறர் மனதில் உள்ளதை அறியும் அறிவு.

5. கேவல ஞானம் - முழுதுணர் ஞானம் அல்லது மூன்று உலகங்களையும், மூன்றுக் காலங்களையும் ஒருங்கே அறியும் அறிவு.


குணஸ்தானத்தில் கடைசி நிலை "தீர்த்தங்கர" நிலை. இக்கடைசி நிலையடைந்த உயிரே கேவல ஞானம் பெற்று திகழ முடியும். இந்த கேவல ஞானத்தை அடைந்தவர்களையே "தீர்த்தங்கரர்கள்" என்று போற்றப் படுகிறார்கள். இவர்களே சமணர்கள் வழிப்படும் கடவுளர்களாம். ஈங்கு ஒன்றை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். எந்த உயிரும், முயன்றால், "தீர்த்தங்கரர்" நிலை எய்த முடியும். அஃதாவது "கடவுளாகவே" ஆக முடியும். ”முடியும்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும், பிறவி என்னும் கடலைக் கடக்க, பிறவிகள் கோடானகோடி பிறவிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஈண்டு நினைவில் வைத்தல்வேண்டும். இந்த இடத்தில்தான் சமணம் மற்ற சமயங்களில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஏனைய சமயங்கள் உயிர்கள் கடவுளை அடைவதைத்தான் வீடுபேறு என்று சாற்றுகின்றன.



கேவல ஞானம்

பிராகிருத (பாகதம்) பெயரான "கேவல ஞானம்" என்பதற்கு தமிழில் "கடையிலா அறிவு","அறிவுவரம்பற்ற", "முழுதுணர் ஞானம்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", அலகிலா அறிவு", "முற்றறிவு", ”தூய அறிவு” என்று பொருள்.

இக்கேவல ஞானத்தையே திருக்குறள் ஆசிரியர் தேவர், "வாலறிவன்" என்று போற்றி புகழ்கிறார். அந்த குறள் இதுதான்.


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்" - திருக்குறள்



வாலறிவன் = வால்+அறிவன். "வால்"(5) என்பதற்கு "Greatness, Abandance,Purity, Last" என்று ஆங்கிலத்தில் பொருள் வரும். வாலறிவு என்பதற்கு "முழுதுணர்ந்த அறிவு" என்றும் "முற்றும் உணர்ந்த அறிவு" என்றும் "கடையிலா அறிவு" என்றும் தூய அறிவு என்றும் பொருள் படும். அவ்வாறே, வாலறிவன் என்பதற்கு கடையிலா ஞானத்தை உடையவன் எனவும், முழுதுணர்ந்த அறிவன் எனவும், அறிவுவரம்பு உடையவன் எனவும் பொருள் படும். வாலறிவு என்பதற்கு "மெய்யுணர்வு" என்று ஈங்கு பொருள் கொள்வது பொருந்தாது!



சமண இலக்கியத்தி வாலறிவு








வாலறிவு என்ற சொற்றொடரை எடுத்தாளும் சமண இலக்கியங்களையும் இங்கு பார்ப்போம்!



1. கடையிகந்த காட்சியொடு கடையிகந்த வாலறிவன் – திருக்கலம்பகம்

2. இலங்கொளி முக்குடை எந்திரத் தியங்க
அறிவன் சரிதம் முறையிற் காட்டி – பெருங்கதை

3. அறிவினாலறியாத அறிவ நீ – மேருமந்தர புராணம்

4. உலகமூன்று பொருங்குட மேத்துமாண்
திலகமாய திற லறிவன்னடி – வளையாபதி

5. பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நி றிரட்டச்
சிங்க வாகனத் திருந்து தெளிந்தொரளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு மறிவா - (நீலகேசி - 157)

இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் கொடுக்கமுடியும் விரிவஞ்சி இங்குக் கொடுக்கப்படவில்லை!


அறம் மறவற்க!
அறமல்லது துணையில்லை!!


இரா.பானுகுமார்,
சென்னை.



குறிப்புகள்:

1. "தொல்லை நம்பிறவி எண்ணின்
தொடுகடல் மணலும் ஆற்றா எல்லைய" - சீவக சிந்தாமணி

2. "ஆழ்கடற் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்" - சீவக சிந்தாமணி

3. "அறிவன், அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்" - சிலப்பதிகாரம்

4. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூகி தரும்" - திருக்குறள்

5. தமிழ் அகராதி

Monday, January 22, 2007

நீலகேசியின் நையாண்டி!


நீலகேசியின் நையாண்டி!



"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

கதை சுருக்கம்:

"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.



"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!

முழுப்பாடல் விவரம்:

"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)

"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".

- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.


இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.

காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.


மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.
இம்மலையின் மற்ற பெயர்கள், கீழ்வரும் சுட்டியில் கண்டு கொள்க.

( http://www.treasurehouseofagathiyar.net/33000/33015.htm )
( http://www.treasurehouseofagathiyar.net/37100/37126.htm )

அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.

சூடாமணி நிகண்டில் கடவுள் பெயர் தொகுதியை கீழே வலைச்சுட்டியில் பார்க்கவும்.

( http://www.thamizham.net/super/nikandu01.htm )

ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.



இரா.பானுகுமார்,
சென்னை.